சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 30 மாடுகளுடன் மூவர் கைது; இருவருக்கு விளக்க மறியல் – வாகனங்கள் மாடுகள் பொலிசாரல் மீட்பு.!!!
(ஜே.கே)
சட்ட விரோதமான முறையில் மாடுகளை வாகனங்களில் அடைத்து கடத்தி கொண்டுவரப்பட்ட நிலையில் மிருகவதைச் சட்டத்தின் கீழ் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்கா தெரிவித்தார் .
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 30 மாடுகள் மீட்கப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் ஓட்டமாவடியிலிருந்து கல்முனைக்கு 23 மாடுகள் கடத்திவரப்பட்ட நிலையில் ஒரு மாடு இறந்துள்ளதுடன் 22 மாடுகள் மற்றும் இரு சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை ஓட்டமாவடியிலிருந்து கல்முனைக்கு கடத்தி வரப்பட்ட ஏழு மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளவுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் மாடுகள் நாளை (03) திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி போலீசார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


