மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது – போதைப்பொருள், கசிப்பு பறிமுதல்.!!!
(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
நேற்று (02) இரவு நடைபெற்ற இந்த சோதனையில், பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மற்றொருவரிடமிருந்து 24 போத்தல் கசிப்பு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மட்டு தலைமையகப் பொலிஸ் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் கருவப்பங்கேணி பகுதியில் சோதனை நடத்திய போது, 34 வயதுடைய பிரபல வியாபாரி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின் போது, அங்கிருந்த சிலர், பெண்கள் உட்பட, பொலிசாரை தடுத்து நிறுத்த முயன்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனுடன் தொடர்பாக, திருப்பெருந்துறை பகுதியில் நடைபெற்ற வேறு ஒரு சோதனையில், 56 வயதுடைய ஒருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கசிப்புடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.