உப்புக்கான அதிக பட்ச; சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு.!!!
உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்திற்குமிடையிலான கலந்துரையாடலுக்குப் பின்னர் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை மறுப்பதாக தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் இடையில் அத்தகைய கலந்துரையாடல் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என்பதையும் அதிகாரசபை சுட்டிக் காட்டுகின்றது.
நுகர்வோர் விவகார அதிகார சபையிலிருந்து சுயாதீனமாக செயற்படும் நுகர்வோர் விவகார சபை, அதிகபட்ச சில்லறை விலையை விதிப்பது குறித்து கருத்துக்களைப் பெறுவதற்கு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் கலந்துரையாடியுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை கருத்திற் கொண்டு, அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார சபை தீர்மானித்தால் மட்டுமே அதிகார சபைக்கு அறிவிப்பதற்கு நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்கும்.
இதன்படி, சம்பந்தப்பட்ட விலைகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதிகாரசபை நடவடிக்கை எடுக்கும்.
இதற்கிடையில், உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தால் ஊடகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விலைகளும், நுகர்வோர் விவகார அதிகாரசபை அதற்கு ஒப்புக் கொண்டதாக வெளியிடப்பட்ட அறிக்கையும் தவறானவையென்று அதிகாரசபை சுட்டிக் காட்டுகின்றது.
இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் தகவல் அல்லது அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத பொதிகளில் உப்பை சந்தைக்கு வெளியிடுவதற்கு இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்தகைய தயாரிப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவ்வாறான தயாரிப்புகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பொருட்களை வழங்கிய இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் சரியான தகவல் மற்றும் விலைகளுடன் கூடிய முறையான விலைப்பட்டியலை வைத்திருக்குமாறு அனைத்து விற்பனையாளர்களுக்கும் அதிகாரசபை அறிவிக்கின்றது.
எனவே, அத்தகைய பற்றுசீட்டு இல்லாமல் பொருட்களை வைத்திருப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.