ஊடகம் மூலம் எதைச் சாதித்துவிட முடியும்; மக்கள் பார்க்கின்ற செய்திகள் யாவும் உண்மையா???
ஊடகம் என்பது மக்களுக்கு உண்மைத் தகவலை கடத்தி வந்து சேர்க்கின்றதொரு பலமான அத்திவாரம் ஆகும்.
எதை ஊடகம் வாயிலாக முதன் முதலில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் சேர்க்கின்றோமோ அதுவே முதலில் மக்கள் மனங்களில் அகலக் கால்பதித்து நிலைத்து விடுகின்றது. என்னதான் மறுப்புகள், மறுப்பறிக்கைகள் தெரிவித்தாலும் ஏலவே பதியப்பட்ட செய்திக்கே பெறுமானம் அதிகம் எனலாம்.
ஒன்றை நாம் முதலில் எழுதுகின்ற போது அல்லது ஊடகத்தினூடாக வெளியிடுகின்ற போது அந்தச் செய்தி எந்தளவு உண்மையானது என்பதை தேடிப்பார்த்து பிரசுரிப்பது செய்தி நிறுவனத்தின் மீதான பற்றை வாசகருக்குள்ளே உருவாக்கும்.
ஊடகமானது எப்போதும் நடுநிலைத் தன்மையோடும், ஒரு பக்கச் சாய்வின்றியும் செயற்படுவது ஊடக தர்மமாகும். சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரினால் கைதுகள் இடம்பெறுகின்ற போது அவரை குற்றமிழைத்தவராக நினைத்து அவரது பெயரை குறிப்பிட்டு எழுதுவது முறையாகாது. இதை நீதித்துறையால் மாத்திரமே வெளிப்படுத்த முடியும்.
ஒருவரின் மானம், மரியாதை என்பது பாதுகாக்கப்பட வேண்டியதென்றாகும். ஊடகம் என்பதற்காக எல்லாவற்றையும் பொதுவெளியில் சுட்டிக்காட்டிவிட முடியாது. ஆயுதத்தின் வலிமையை விடவும் பேனாவின் வலிமை உச்சமானது என்பார்கள். குணிந்து ஒன்றை நாம் எழுதுகின்ற போது எழுந்து நாம் அடுத்தவரை பார்த்துக்கொள்ள வேண்டும். விருப்பு, வெறுப்புகளுக்காக அடுத்தவரின் குறை நிறைகளை சமூகப் பக்கங்களில் வெளிக்கொணர்வதும் முறையாகாது.
விரைவாக செய்திகளை பிரசுரிக்க அல்லது காட்சிப்படுத்த ஊடகம் நினைக்கின்ற போது எங்கோ ஓரிடத்தில் பொய்யும் செய்தியோடு சங்கமித்து விடுகிறது. அதுபோலத்தான் கேற்கின்ற விடயங்களை செய்தியாக பரப்ப நினைத்தால் அதில் உண்மையோடு பொய்யும் சங்கமித்த ஒரு குட்டிக் கதையாகவே மாறிப்போகும்.
ஊடகக்காரன் எழுதுகின்ற எழுத்தை அல்லது செய்தியை அதை வாசிக்கின்ற வாசகர்கள் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் செய்திகள் அமையப்பெறுவது ஊடகவியலாளன் மீதான பிடிப்பை எப்போதுமே ஏற்படுத்தும்.
பொய்ச்செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி குளிர்காய நினைக்கின்ற சில ஊடகவியஸாளர்கள், ஊடகவியல் தொடர்பான வரையரை தெரியாமல் “ஊடகவியலாளர்” என்ற லேபலோடு அங்கும் இங்கும் சுற்றித்திரிவது வேடிக்கையே.
ஊடகலியலாளன் என்பவன் ஒரு துறையோடு மட்டும் அடங்கிக் கிடப்பவன் அல்ல. அவனது அறிவும், ஆற்றலும் விசாலமானது. ஒரு துறைக்குள்ளே நிற்பவனுக்கு அந்தத்துறை மாத்திரம் தெரிந்தால் போதும். ஆனால் ஊடகக்காரனுக்கு உலகிலுள்ள அத்தனை துறைகளும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவனால் சகல துறைகளிலும் தனது செய்தியை வெளிக்கொணர முடியும்.
இன்று மக்கள் பெரும்பாலும் ஒரு நிகழ்வின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள ஊடகத்தையே நம்பி இருக்கின்றார்கள். அதனால் மக்கள் எதிர்பார்க்கின்ற உண்மை தகவல்களை முறைப்படி கொண்டுபோய் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு ஊடகக்காரனினதும் கடமையாகும்.
ஊடகத்திற்கென ஊடக தர்மங்கள் எப்போதுமே இருக்கின்றது. அந்த ஊடக ஒழுக்கத்தினை சரிவர முறையாகப் புரிந்து கொண்டு செயற்படுவானேயானால் நிச்சயம் அவனது செய்திக்கு பெறுமானம் இருக்கும்.
சிலருக்குள்ளே எழுகின்ற கேள்விதான் ஊடகத்தினால் எதைச் சாதித்துவிட முடியும் என்பது. ஊடகம் என்பது பொதுவெளியில் எதைக்கொண்டு வந்து சேர்க்கின்றதோ அதையே மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது. ஒரு தேசத்தின் ஆட்சியையே புரட்டிப் போட்ட சம்பவங்களும், புரட்சிகளை மக்களுக்குள்ளே உருவாக்கிய சம்பவங்களும் நடந்தேறி இருக்கின்றது.
ஏன் இலங்கையின் ஆட்சியையும், தலையெழுத்தையும் மாற்றியதுகூட இந்த சமூக ஊடகங்களேயாகும். இதனால்தான் ஊடகக்காரர்கள் அடிக்கடி கொலை செய்யப்படுகின்றார்கள்.
மூடிக்கிடக்கின்ற விடயங்களை வெட்டவெளிக்கு கொண்டு வருகின்றதொரு பெரும் பங்களிப்பை இந்த ஊடகங்களே செய்கிறது.
ஆக ஊடகங்களால் உண்மையை பொய்யாக்கவும் முடியும், பொய்யை உண்மையாக்கவும் முடியும். ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகமானது எப்போதுமே உண்மையைப் பரப்புகின்ற, ஒரு தேசியத்தின் சட்டதிட்டங்களை, இறைமையை பாதிக்காத அளவுக்கு எப்போதுமே நடுநிலையோடு செயற்பட வேண்டும்.
ஒருவரின் எழுத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவரின் உரிமைகளோடு சங்கமிக்காத வகையில் ஊடகக்காரர்கள் செயற்படுவது ஊடக தர்மத்தையும், சிறந்த வாசகர்களையும் ஊடகக்காரனுக்கு ஈட்டித்தரும்.
ஆக ஊடகவியலாளன் தனித்துவமாக, தனித்துவமான எழுத்துக்களை பதியும் போது நிச்சயம் ஊடகக்காரனுக்கான அங்கீகாரம் நாலாபுறமும் பரந்துபட்ட அளவில் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
-எம்.ரி.எம்-