மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி – நான்கு பிள்ளைகளின் தாய் பலி.!!!
(மட்டக்களப்பு செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில் இன்று (20) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துயரச்சம்பவம் ஒன்று பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
தகரத்தினால் அமைக்கப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை, வீட்டினுள் நெல்லினை உண்பதற்காக நுழைந்த காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர் நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் (58) என்பவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின்பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பணித்துள்ளார்.
இதேவேளை, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என். சத்தியானந்தயின் அனுமதிக்கமைவாக, யானை தாக்கி உயிரிழந்தமைக்காக பத்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான முற்பணமாக, இறந்தவரின் மகனிடம் ஒரு இலட்சம் ரூபா காசேலையை கிராம உத்தியோகத்தரும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரும் வைத்தியசாலையில் வழங்கியுள்ளனர்.

