அமெரிக்க ‘கிரீன் கார்ட்’ திட்டம் இடைநிறுத்தம் — ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு.!!!
அமெரிக்காவின் ‘கிரீன் கார்ட்’ (Green Card) குடிவரவு சேவைத் திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் ‘கிரீன் கார்ட்’ திட்டத்தின் ஊடாகவே அமெரிக்காவில் குடியுரிமை பெற்றிருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும் இந்த குடிவரவு சேவைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்கதாக, இந்த விசா திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளிலிருந்தும் சுமார் 50,000 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான வாய்ப்பு பெறுகின்றனர். நடப்பு ஆண்டில் மட்டும் ‘கிரீன் கார்ட்’ திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பால் உலகளாவிய குடிவரவு விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் கவலை நிலவுகிறது.