மட்டக்களப்பு மார்க்கமூடன ரயில் சேவைகள்; இன்று முதல் மீண்டும் ஆரம்பம்.!!!
மட்டக்களப்புக்கு மார்க்கமூடான ரயில் சேவைகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக, பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய இடையிலுள்ள கல்லெல்ல பகுதியில் ரயில் பாதையின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தது. இதன் காரணமாக மட்டக்களப்பை நோக்கிய ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
சேதமடைந்த ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட அவசர சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் வழமைபோல் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
இதனிடையே, வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகளும் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. ‘யாழ் ராணி’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் மூலம் இந்தப் பயணங்கள் மீளத் தொடங்கப்படவுள்ளன.
அனுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் ‘யாழ் ராணி’ எக்ஸ்பிரஸ் ரயில், மாலை 6.53 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.