2026ஆம் ஆண்டை அமைதியுடனும் உற்சாகத்துடனும் வரவேற்ற – மட்டக்களப்பு மக்கள்.!!!
2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (01) நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணியளவில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புத்தாண்டை வரவேற்கும் இந்தக் கணத்தில் நகரம் முழுவதும் உற்சாகமும் கொண்டாட்ட உணர்வும் நிறைந்திருந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதை காண முடிந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஒற்றுமையின் அடையாளமாக இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
சமீப காலமாக நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலர் உயிரிழந்தும், சொத்துகளை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் முன்கூட்டியே பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மாநகர முதல்வரின் அந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இளைஞர்களும் பொதுமக்களும் நகருக்குள் ஒன்றுகூடி மிகவும் அமைதியான முறையிலும், அதே நேரத்தில் உற்சாகத்துடனும் 2026ஆம் ஆண்டைப் புத்தாண்டாக வரவேற்றனர்.
தற்போது மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும், பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாது மக்கள் பெருந்தொகையாக திரண்டு வந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.


