உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

றியாஸா எம் ஜவாஹிரின் நிலங்களின் வாசம் கவிதைத் பிரதி சொல்லும் செய்தி.!!!

அப்துல் றஸாக்

ஒரு சாமானிய வாசகனுக்கு, சாதாரண ஒரு‌ மனிதனால் செய்ய முடியாத வேலையை ஒரு கவிஞன் செய்கிறான். தான் காணும் பிறிதொரு உலகத்தை, கலை அம்சத்தை, வாழ்வியலை தன் கற்பனை சக்தியின் ஊடாக படைப்பாற்றால் ஊடாக வெளிக் கொணர்வதால் அவன் / அவள் படைப்பாளானாக கொண்டாடப்படுகிறான்/ள். அதனாலேயே இலக்கியம் , கவிதை போன்றவையும் ஒரு படைப்பாக Creation இருக்கிறது. இந்த படைக்கும் ஆற்றல் இறைவன் மனிதனுக்கு மட்டுமே கொடுத்த ஒரு கொடை. தனக்கு மட்டுமே முடியுமான ஒன்றை இந்த பூமியில் செய்வதற்கு இந்த உலகத்தில் தனது பிரதிநிதியாக கலீபாக மனிதனை நியமித்ததன் தார்ப்பரியமும் இது தான். இதனாலேயே எக்காலத்திலும் கவிதை என்பது ஒரு Creativity ஆக இருக்கிறது.

றியாஸா எம் ஜவாஹிரின் இந்த படைப்பு நமக்கு கண்முன்னே தெரியும் சாதாரண உலகை இன்னும் ஒரு இரசனைக் கண் கொண்டு நம்மையும் பார்க்க வைக்கிறது. அடடா!! இதிலே இப்படியும் ஒன்று இருக்கிறதே என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.‌ நயக்க வைக்கிறது. இலேசாக மழை பொழியும் பின் அந்திப்பொழுதில் மெல்லென எழும்பும் புழுதி நிலத்தின் வாசம் மூக்கை ஊடறுத்து, நம் மூளை நரம்புகளை மீட்டுவது போல அப்படியே இந்த கவிதைகளும் அந்த சம்பவத்தை காட்சிப் புலனாக்கி நம்மை லயிக்க வைக்கின்றன. இது தான் நிலங்களின் வாசத்தின் விஷேட அம்சம்.

“வட்டமாக்குவதும்
சதுரம் செய்வதும்
மாற்றி மாற்றி ஒஞ்
ஒழுங்குபடுத்துவதும்
சங்கடமாயிருந்தாலும்
மனக்கொப்பிலமர்ந்து
போதாமைகளின் பிசாசு பிறாண்டியடிக்கிறது”

இப்படி நமது வீட்டு அன்றாட அலுவல் ஒன்றை மானுட மனத்தின் குரங்கு பாய்ச்சலினோடு நம் கண் முன்னே விவரித்து காட்டுகிறார் கவிதாயினி ரியாஸா டீச்சர். மனித மனத்தின் இயற்கை இயல்பை எவ்வளவு தத்ரூபமாக இந்த வரிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படியே அதற்கு காரணமான மானுடவியல் பௌதீக விதியையும் தனது கவிதையோடு முடிச்சுப் போட்டு…

“நான் ஆதாமின் மகள் இரண்டு ஓடை நிரம்பத் தங்கம் குவித்தாலும் மூன்றாவது ஓடை கேட்பவள்” என்று தன்னை தேற்றிக்கொள்வது போல நம்மையும் தேற்றிக் கொள்கிறார். நிலையில்லாத மனித மனத்தின் இயல்பை விளங்க வைக்கிறார்.

ஒரு கடல் தித்திப்பு என்ற தலைப்பில் அவரின் இன்னும் ஒரு கவிதையை தந்திருக்கிறார். கவிதை என்பதை விட ஒரு சுகானுபவத்தை தந்திருக்கிறார். அது நம் சிறுபராயத்தில் நினைவுகளை அப்படியே கிளறி விடுகிறது. கூடவே நமக்கும் தாய்மையின் தித்திப்பான வேர்சன் ஒன்றை உணரச் செய்கிறது.

“நண்பி தனக்குத் தந்த இனிப்பொன்றை தருகிறாள்.
மினிங்கும் உறை சுற்றப்பட்ட அது கவர்ச்சியும் புதினமாய் ,
நாவூறும் வாசனை கசிகிறது,
அடிக்கடி தடவி
இனிமையில் மொய்த்தூறிய
எச்சில் விழுங்கி
புத்தகப் பையின் அற்புத மூலையொன்றில் பவித்திரமாக்கி
பள்ளி கலைய பாய்ந்து ஓடி வந்து அம்மாவை கண் மூடச் சொல்லி அற்புதத்தை ஊட்டி நிறைகிறாள் வெல்லக்கட்டி
கடலின் நீரெல்லாம் தித்திக்கிறது.”

அருமை. எப்படி ஒரு‌ புதுமை. சின்னஞ்சிறு வார்த்தைகளை கோர்த்து இப்படி ஒரு அதிசயித்தை அந்த டொபி போல தித்திப்பாக செய்து காட்ட கவிஞர்களால் தான் முடியும்.

இப்படி சாதாரண வாழ்க்கை சம்பவங்களை தன் வரிகளோடு தத்துரூபமாக , கவிதையாக நம் மனக்கண் முன்னே வடித்திருக்கிறார் றியாசா டீச்சர்.

“பிரிந்து போனவர்கள் எல்லாம் என்னவானார்கள்?
அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள்
என் கையெழுத்தை தட்டி நிமிரத்திய டீச்சர்
ஆலிலையில் தொப்பி கோர்த்து அணிவித்த உயர் வகுப்பு அக்கா
சங்கு மாலையணிந்து யாசகம் கேட்டு வந்த மூக்குத்தி பெண்
கண்காட்சியொன்றில்
சித்திரங்களன்றி என்னிலேயே வழுக்கி வழுக்கி விழுந்த உயரமான இளைஞன்
என் கவிதைகள் வாசம் என குறுஞ்செய்திகள் அனுப்பி அன்பைக் குவித்த ஒருத்தி
இன்னும் இன்னும் பிரிந்து போனவர்கள் எல்லாம் என்னவானார்கள்

அவர்களுக்கு பிடித்த பாடலை அவர்களுக்கு பிடித்த மரங்கொத்தியை அவர்களுக்கு பிடித்த ஊமத்தம் பூவை எப்போதாவது காண்கையில் சம்பந்தமே இல்லாமல்
அற்புதமாய் விரிந்து
அரை நொடிக்குள் மறைகிறார்கள் இடம் தெரியாத வண்ணம்
அவர்கள் சென்றதற்கு நானும் தான் காரணம்
எந்தப் பொழுதில் இறுதிச் சந்திப் என்று யார் அறிவார்?”

இப்படி வாழ்வியல் யதார்த்தங்களை சின்னச்சின்ன விஷயங்களை இரசனைக் கண்ணோடும் கவிதையோடும் அணுகும் அவரின் பாங்கை நிலங்களின் வாசம் எங்கும் காண முடியும்.

Related News

Total Websites Views

Total Views: 194621

Search

விளம்பரங்கள்