அல்-பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்; 125 மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!
– எம்.ரி.எம். யூனுஸ் –
அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 125 தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (30) அல்பஜ்ர் மண்டபத்தில் நடைபெற்றது.
அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே. பழீலுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவது பாராட்டத்தக்க செயல் என விருந்தினர்கள் கருத்து தெரிவித்ததுடன், அல் பஜ்ர் நலன்புரி அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வரும் சமூக சேவைகளையும் உயர்வாகப் பாராட்டினர்.
இந்நிகழ்வில் ஊர் பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், அமைப்பின் நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் ரூ.3000 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகப் பை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
























