ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி காயமடைந்தாரா? சர்வதேச அளவில் பரபரப்பு.!!!
அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி உயிரிழந்ததையடுத்து, அவரது மகனான மொஜ்தபா காமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சமீபத்திய தாக்குதல் ஒன்றில் மொஜ்தபா காமெனிக்கு இரு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோதலின் ஆரம்ப நாளில் ஏற்பட்ட தாக்குதலின் போது அவர் காயமடைந்ததாக இஸ்ரேலிய மற்றும் ஈரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னர் ஈரானிய அரசு தொலைக்காட்சி அவரை “போரில் காயமடைந்த வீரர்” என விவரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், புதிய பொறுப்பை ஏற்றதிலிருந்து மொஜ்தபா காமெனி பொதுமக்கள் முன் தோன்றாததும், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகாததும் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அவரது காயங்களே பொதுமக்கள் முன் தோன்றாததற்கான காரணமாக இருக்கலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவே அவர் பொதுமக்கள் பார்வையில் இருந்து விலகி இருக்கிறார் என்ற கருத்தும் பரவி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் அவரது தந்தையும் மனைவியும் உயிரிழந்ததாக கூறப்படுகின்ற போதிலும், மொஜ்தபா காமெனி எவ்வாறு காயமடைந்தார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஈரானிய ஜனாதிபதியின் மகனான யூசெப் பெஷெஸ்கியான் இத்தகவல்களை மறுத்துள்ளார். மொஜ்தபா காமெனியின் உடல்நிலை தொடர்பான செய்திகளை கேட்டபின், அவருடன் தொடர்பில் உள்ளவர்களிடம் விசாரித்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் தகவல் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.