கத்தார் தலைநகரில் ஹமாஸ் தலைமையை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: பலர் பலி.!!!
கத்தார் தலைநகரான டோஹாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள், ஹமாஸ் தலைமை மற்றும் அதன் மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய மத்தியஸ்தராக உள்ள கட்டாரில், இஸ்ரேல் இவ்வாறான தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேல் காஸா, லெபனான், யேமன் மற்றும் சிரியா மீது குண்டுவீசி வருவதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனத்திலும் தினசரி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
”தாக்குதலுக்கு உள்ளான தலைமை உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர், மேலும் அக்டோபர் 7 படுகொலை மற்றும் இஸ்ரேல் அரசுக்கு எதிரான போரை நடத்துவதற்கு இவர்கள் நேரடியாகப் பொறுப்பானவர்கள்” என்று இஸ்ரேலியா ராணுவம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”தாக்குதலுக்கு முன்னர், துல்லியமான ஆயுதங்கள் மற்றும் கூடுதல் புலனாய்வுத் தகவல்களின் பயன்பாடு உட்பட, சம்பந்தப்படாத நபர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.