காத்தான்குடி 167A பதுரியா மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம் இரட்டை வெற்றி; கிழக்கு மாகாண திறன் விருது – 2025.!!!
– எம்.ரி.எம். யூனுஸ் –
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண திறன் மதிப்பீட்டு விருது – 2025 வழங்கும் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கி. இளம் குமுதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் நிர்வாகச் செயல்பாடுகள், சமூக சேவைகள் மற்றும் செயல்திறனை மதிப்பிட்டு, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த விழாவில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து, நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டு விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மீமன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த்குமார், மாகாண அமைச்சின் செயலாளர், திணைக்கள செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டின் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி 167A பதுரியா மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம். பிரதேச மட்டத்தில் முதலாவது இடத்தையும், மாவட்ட மட்டத்தில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது. அதன் பொருளாளர் திருமதி அனீஸா யூனுஸ் மற்றும் சங்க உறுப்பினர்கள் விருதினை பெற்றுக் கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான மாநாடு நடைபெற்று, வெற்றி பெற்ற சங்கங்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.





