காத்தான்குடி வாவிக்கரை வீதி முழுமையாக சுத்தம் – நகரசபையின் விசேட தூய்மை நடவடிக்கை.!!!
– எம்.ரி.எம். யூனுஸ் –
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் இ.எம். றுஸ்வின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, காத்தான்குடி வாவிக்கரை வீதியை (KATTANKUDY LAGOON DRIVE CLEANING) முழுமையாக சுத்தம் செய்யும் விசேட வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (27) காலை மேற்கொள்ளப்பட்டது.
காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சுமார் 2.2 கிலோ மீற்றர் நீளமுடைய வாவிக்கரை வீதி சுத்தப்படுத்தப்பட்டதுடன், மின்கம்பிகளுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த மரக்கிளைகளும் அகற்றப்பட்டன.
கரையோரப் பகுதிகளிலுள்ள எஸ்.எச்.எம். அஸ்பர், எம்.ஐ. ஜெஸீம், இ.எம். றுஸ்வின், என்.எம்.எம். சாஹிர் ஆகிய வட்டார உறுப்பினர்களின் பகுதிகள் இந்த தூய்மை நடவடிக்கையின் கீழ் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபையின் கெளரவ உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கினர்.
கரையோரத்தை முழுமையாக சுத்தம் செய்யும் இந்த வேலைத்திட்டத்திற்காக நகரசபை தனது முழுமையான ஆளணியையும், வாகன வசதிகளையும் பயன்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, குப்பைகள் மற்றும் கழிவுகளை ஆற்றங்கரையோரங்களில் வீச வேண்டாம் எனவும், நகரசபை வாகனங்களின் மூலம் உரிய முறையில் கையளிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், கழிவுகளை சட்டவிரோதமாக வீசுபவர்களுக்கு எதிராக நகரசபை கடுமையான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும், நகரசபை ஊடாக கண்காணிப்பு கமராக்கள் பல இடங்களில் பொருத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் ஏனைய நகரசபை உறுப்பினர்களின் வட்டாரங்களில் இவ்வாறான தூய்மை பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என நகரசபை தெரிவித்துள்ளது.























