மத்திய கிழக்கு போர் பதற்றம்: உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலரைத் தாண்டியது.!!!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
ஈரானை மையமாகக் கொண்டு மார்ச் 2026 முதல் மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் காரணமாக அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, உலகின் முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் (GPS) ஜாமிங் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து சீர்குலைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலைமையின் விளைவாக, இன்று காலை நிலவரப்படி உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலைகளும் மின்சாரக் கட்டணங்களும் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைப்பை சமநிலைப்படுத்துவதற்காக ஒபெக் (OPEC) நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
எனினும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக எரிசக்தி சந்தையில் நிலையற்ற தன்மை தொடர்ந்தும் நீடிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.