அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான; USS ஆபிரகாம் லிங்கன் மீது ஏவுகணை தாக்குதல் – ஈரான் அறிவிப்பு.!!!
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையைக் கடுமையாக்கும் வகையில், அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட தகவலின்படி, வளைகுடா கடற்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்த குறித்த போர்க்கப்பல் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களில், ஈரானின் உயர்தலைவர் அலி காமேனி உயிரிழந்ததாக வெளியான தகவல்களுக்கு பின்னர், இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
USS ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ்-வகை விமானம் தாங்கி கப்பல்களில் ஐந்தாவது கப்பலாகும். இந்தக் கப்பலுடன் மூன்று அழிப்புக் கப்பல்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளிட்ட போர்க்கப்பல்கள் இணைந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதல் குழுவில்:
எதிரி ரேடாரைத் தவிர்க்கும் திறன் கொண்ட F-35 Lightning II ஸ்டெல்த் போர் விமானங்கள்
டோமாஹாக் தரைத் தாக்குதல் ஏவுகணைகள் ஏந்திய அழிப்புக் கப்பல்கள்
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்
உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“அமெரிக்காவின் நிலமும் கடலும் ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக மாறும்” என IRGC கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இருப்பினும், மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை மேலும் தீவிரமடையும் அபாயம் உருவாகியுள்ளது.
சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள், இந்நிலை நீடித்தால் வளைகுடா பிராந்தியத்தில் பெரிய அளவிலான இராணுவ மோதல் உருவாகக்கூடும் என எச்சரித்து வருகின்றனர்.