ஈரானின் புதிய அதி உயர் தலைவராக – மொஜ்தபா கமேனி தெரிவு.!!!
ஈரானின் புதிய அதி உயர் தலைவராக (Supreme Leader) அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28ஆம் திகதி ஈரானின் அதி உயர் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன் பின்னர் நாட்டின் அரசியல் நிலைமையில் ஏற்பட்ட மாற்றத்தால் இடைக்கால பொறுப்பை நிபுணர்கள் சபை ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து 80 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை (Assembly of Experts) புதிய அதி உயர் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆலோசனைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் மொஜ்தபா கமேனியை புதிய தலைவராகத் தெரிவு செய்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
56 வயதான மொஜ்தபா கமேனி, நீண்ட காலமாக ஈரானின் அரசியல் மற்றும் மத அமைப்புகளில் திரைமறைவாக செல்வாக்கு செலுத்திய நபராகக் கருதப்படுகிறார். குறிப்பாக பாசிஜ் (Basij) துணை இராணுவப்படையுடன் தொடர்பு வைத்திருந்ததுடன், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடனும் நெருங்கிய உறவை பேணியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இவ்வாறான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவர் இதுவரை ஈரானின் இஸ்லாமிய குடியரசில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசுப் பதவியையும் வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களிலும் மொஜ்தபா கமேனியின் பெயர் இந்த உயரிய பதவிக்கான சாத்தியமான நபராக பலமுறை பேசப்பட்டிருந்தது.
அதேவேளை, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானின் அரசியல் மற்றும் மத அமைப்புகளில் ஆழமான செல்வாக்கை உருவாக்கிய தனது தந்தையைப் போன்ற ஒரு தலைவராக உருவெடுக்க அவருக்கு சில காலம் தேவைப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போது ஈரானின் ஆட்சியின் உயர்மட்டப் பிரிவுகளுக்கிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளை சமநிலைப்படுத்தி, ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்கும் பணியே அவரது முக்கிய சவாலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.