போதைப்பொருள் பிரச்சினைக்கு தேசிய முன்னுரிமை அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!!!
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை முகாமைத்துவம் செய்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் தொடர்பான 2026–2030 தேசிய மூலோபாயத் திட்டம் (SUD) குறித்த தெளிவுபடுத்தல் சந்திப்பு மார்ச் 13ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்கள் பங்கேற்ற இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்னெடுக்கப்படும் செயற்பாட்டுத் திட்டங்கள் அடிமட்ட அளவிலேயே கண்கூடான பெறுபேறுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் எதிர்நோக்கும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த தேசிய மூலோபாயத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
சான்றுகள் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் மூலம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை மேம்படுத்துதல், மேலும் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்துடன் மீண்டும் இணைக்கும் செயல்முறைகளை விரிவுபடுத்துதல் ஆகியவையே இந்த 2026–2030 தேசிய மூலோபாயத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் காணப்படுகின்றன.





