பாவலர் பண்ணை வெளியிட்டுள்ள “நினைவின் நிழல்” இலக்கிய ஆவணம் – பாவேந்தல் பாலமுனை பாறூக்
சென்ற 05-12-2024ல் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து கொண்ட கலாபூசணம், மௌலவி காத்தான்குடி பௌஸ் அவர்களின் நினைவாக, அவர் மறைந்து 50 வது நாளில்(24-01-2025) காத்தான் குடி மண்ணில் இருந்து வெளியிடப்பட்டிருக்கின்றது “நினைவின் நிழல்” கவிதைத் தொகுதி.
பாவலர் பண்ணை வெளியீடாக பாவலர் சாந்தி முஹியித்தீன் இதனைத் தொகுத்தளித்திருக்கின்றார். 66 பக்கங்களில் 27 கவிஞர்களின் இரங்கல் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர்,பன்னூலாசிரியர் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் ஆகியோரின் வாழ்த்துரையோடு மலர்ந்துள்ள தொகுப்பில், காத்தான்குடி மண்ணின் கவிஞர்களும், ஈழத்தின் மூத்த இலக்கிய வாதிகளும் தங்கள் நினைவுகளைப் பதிவு செய்துள்ளனர்.
“தேனினும் இனிமையுன்றன் தீந்தமிழ் பேச்சு மேடைமாட்சிமை மிக்க மிம்பர் மாநபி போதம் கண்டேன் கட்டுரை ,கவிதை, ஆய்வு, கலாசாரம் பட்டிமன்றம் செட்டுற இணைந்து ழைத்த சிந்தனைச் செம்மல் நீதான்” என்று பாவலர் சாந்தி முஹியித்தீன் தன்பாவில் குறிப்பிட,”பள்ளிகளில் இமாமாகப் பணிகள் செய்தார் பண்பூட்டும் போதனைகள் புரிந்து நின்றார் உள்ளத்தை தொடுகின்ற கவிதை செய்து ஒளிர்கின்ற கலைத் துறையில் உயர்ந்து நின்றார் நல்லறபுக் கவியமுதம் வித்ரியாவை நயக்கின்ற தமிழ் மொழியில் வடித்துத் தந்தார் உள்ளத்தில் உறைந்ததவர் ஒளிரும் நாமம் ஒருபோதும் அவர் நாமம் மறக்கவொண்ணா.” என்று கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி, அவரின் இலக்கியப் பணி பற்றி விதந்துரைத்திட,”அலைகடலைத் தாண்டியும் நற்புக ழடைந்தார் ஆற்றலுடன் கவிப் பெருக்கால் ஆன்றோர் போற்ற நிலமிசையில் வாழுமட்டும் தமிழின் மேன்மை நிலைத்திடற்றன் பங்களித்தார் நிலைக்கும் நாமம்” என்று காப்பியக்கோ ஜின்னா தனது கவிதையில் பௌஸ் அவர்களின் ஆற்றலினையும் புகழினையும் பதிவு செய்திருக்கிறார்.
“பாப்புனைந்து நம்மையெல்லாம் பரவசிக்க செய்த மலர், பூத்திருந்து பூத்திருந்து புது இதழ்கள் விரித்த மலர், ஆர்ப்பாட்டம் இல்லாது அமுத கவி சொரிந்த மலர் காற்றோடு போயிற்று கவலைகளை மிஞ்ச விட்டு..! ” என்று பாவேந்தல் பாலமுனை பாறூக் துயரினைப் பாட,ஏனைய கவிஞர்களும் கலாபூஷணம், மௌலவி பௌஸ் அவர்களின் ஆளுமையை,ஆற்றலை,இலக்கிய ஈடுபாட்டை கவி வரிகளில் எடுத்தியம்பி உள்ளனர்.
“இதயக் கூட்டில் தேடல் பெருக்கி எழுதியதெல்லாம் பொக்கிஷங்கள் உங்கள் பிரிவால் அதிர்ந்தோம் இக்கணங்கள் ” – சந்தக்கவி அச்சி முஹம்மது.”கண்டால் உடமாட்டார் கலகலண்டு கதச்சிருவார் நிண்ட இடமெல்லாம்- நல்ல நெலவிருக்காப் போலிருக்கும்”- வித்தகர் எழுகவி ஜலீல்.”நீங்கள் வாழ்நாளில் செய்த இலக்கியப் பணி ஏராளம். இதனால் உங்களுக்கு இலக்கிய நேசங்கள் தாராளம்”- கலைமதி றபாய்தீன்.” பாவலர் பண்ணையில் இணைந்தார்’பா’ வென்னும் கவிநூலும் தந்தார்”-கலைச் செம்மல் ஏ.எல்.எம். சித்தீக்.
“அரபுமொழி கற்றுள்ளாய் ஆய்ந்துள்ளாய் மார்க்கத்தைமரபுவழிக் கவிதைபலமாண்பாக யாத்துள்ளாய்”-எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில்.”ஒரு நூலை அரங்கேற்ற ஒண்ணாது நாம்பிதுங்க இருபத்து மூன்றையுமே என்னமாய் யாத்தாயோ?”- .ஆ.மு. மீராசாஹிபு.”இலக்கியப் பாதையிலே பயணம் செய்து இலங்கையின் பல விடத்தும் தமிழ் வளர்த்து துலங்கிட்ட உமதெழுத்தால் விளைந்த நூல்கள் தூய்மையுடன் சமூகத்தை வழி நடத்தும்”- கலாபூஷணம் மருதூர் ஜமால்தீன்.
“கலா பூசண விருதோடு கனதியாய்ப் பல விருது பெற்றீர் இறுதியாக வித்தகர் விருதோடு இவ்வுலகை விட்டு விடைபெற்றீர்!”-வெள்ளி வெளிச்சம் ஏ.ரீ.எம். றியாஸ்.”சிறுவர்க்கும் பாடல்கள் வடித்தார் சில ஆய்வுகளும் சிறப்பாகச் செய்தார் கட்டுரைகள் கவிதைகள் தந்தார்”,-முப்லிகா பிர்தௌஸ்.”ஓதிப் படித்த உலமா நீ வேதத்தை சுமந்து சொன்ன விழிப்புக்கள் அனந்தம்”-பாவரசு பதியத்தளாவ பாறூக்.
“மௌலவி காத்தான்குடி பௌஸ் இவர் கலை உலகின் முத்து மட்டுமல்ல காத்தான்குடியின் சொத்துங் கூட”-மதியன்பன் மஜீத்.” நண்பனே பவிசு காட்டாத பௌஸே உன்றன் இனிய வதனமது என்றும் என்மனக் கண்ணில் நிழலாடுகின்றதே!”- கலாபூஷணம் ஈழத்து நூன்.”நாடகத்தின் நாயகன் நீ நகைச்சுவையின் பாவலன் நீ ஏடெழுதும் எழுத்தாளன் நீ”-கபீர் எம் ஹஸன்.”யாரோடும் பகையில்லை யாருக்கும் தீங்கில்லை ஊரோடும் உறவோடும் ஒன்றுபட்டு வாழ்ந்த மகன்”-கலைநிலா அல்ஹாஜ் எம்.ஐ.எம். முஸ்தபா.”மௌலவி பௌஸ் மார்க்கப் பற்றை மட்டுமல்ல தேசப்பற்றையும் சேர்த்து வைத்திருந்தார்”- செரண்டிப் முஸ்தபா.”கவிஞனாய் ஊடகனாய் ஆலிமாய் இமாமாகவும் ஏற்றம் பெற்றார்”-கவிச்சுடர் காத்தான்குடி எம்.எம் ஜுனைதீன்.”பேர்பெற்ற எழுத்தாளர், பேறுபெற்ற கலாபூஷணம் சீர்மிக்க “ஷர்க்கி”சேர்ந்து பழகும் பண்பாளர்”-கவிமேகம் மௌலவி எம்.எச்.எம். இக்பால்.” இன் முகத்துடன் பேசும் இனிய நண்பரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது” -எச்.எம். இக்பால்கான்.”சன்மார்க்கப் பணியோடு நில்லாது சகலகலா வல்லவராக திகழ்ந்தவரே பன்னூல் பல்குரலோடு ஆய்விலும் தத்துவ வித்தகரே”- ஏ.எல்.எம். சத்தார்(அல்- அஸ்லம்)”காத்த மண்ணில் வந்துதித்த பெரும் கவிஞன் ,ஆத்மீகத்தைப் பெற்றெடுத்த நல்லறிஞன், காத்திரமாய் கலைபயின்ற அருங் கலைஞன்”-மௌலவியா ஹாஜறா கலீலுர்றஹ்மான்.”அரபும் தமிழும் என இரு இறக்கைகள் தாங்கிய இராஜாளிப் பறவை அவர். இலக்கிய களத்தில் இலங்கி இமாமாகவும் துலங்கிய இன்தமிழ்ப் பாவலர் அவர்”- தீரன் ஆர் .எம். நௌஸாத்.”பா இதழ் பத்திரிகை பாருக்கு வழங்கிய பின், பலர்புகழை வாங்கிய பாவலனும் நீயப்பா! வித்தகர் நபிமொழியின் ‘வித்ரியா’ப் பெரு நூலை, விதைத்து விட்டுப் பூமியிலே விடைபெற்றாய் ஏன் அப்பா?- இப்னு சாந்தி.”அரபு மொழி படித்து அடுத்தவர்க்கும் கற்பித்த அறவழி அறிஞர். தமிழ் மொழியில் வடித்து தரமான கவிதந்த காத்த நகர் கவியரசு”.-நிஷவ்ஸ்.
இவ்வாறு, கவிஞர்கள் கலாபூஷணம் மௌலவி பௌஸ் அவர்களின் இலக்கியப் பணியையும்,மார்க்கப் பணியையும் தங்கள் கவிதைகளில் எடுத்துக் கூறியுள்ளனர்.
“இஸ்லாம் எங்கள் வழி,இன்பத் தமிழ் எங்கள் மொழி, இலக்கியம் எங்கள் விழி” என்ற கோட்பாட்டோடு எழுத்துலகில் பிரகாசித்தவர் மௌலவி காத்தான்குடி பௌஸ். 1974 ல் நூறுல் பலாஹ் ஆண்டுமலரில் எழுதியதின் மூலம் எழுத்துலக நுழைவு பெற்ற அவர்,தனது ஐம்பது ஆண்டு கால இலக்கிய வாழ்வில் 23 நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
அரச உயர்விருதான கலாபூஷணம், கிழக்கு மாகாண வித்தகர் விருது,முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் பத்றுல் மில்லத் விருது என்பன உட்பட உள்நாட்டு ,வெளிநாட்டு இலக்கிய மாநாடுகளிலும் பல விருதுகள் பெற்றவர்.
காத்தான்குடியில் உதுமாலெவ்வை-ஹசீனா உம்மா தம்பதியின் மகனாக1959ல் பிறந்த அவர்,மௌலவி பட்டம் பெற்று, இமாமாகவும்,மார்க்கப் போதகராகவும் பலப்பிட்டி,பாணந்துறைப் பிரதேசங்களில் பணியாற்றி மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர்.
அவரின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள “நினைவின் நிழல்” (கவிதைத் தொகுப்பு)இலக்கிய உலகுக்குக் கிடைத்த ஆவணமாகும். பாவலர் பண்ணைக்கும் தொகுப்பாளர் பாவலர்சாந்தி முகையதீனுக்கும் நமது பாராட்டுக்கள்.
கவிஞர்,மௌலவி பௌஸ் அவர்களின் மறுமை நல்வாழ்வுக்காக நமது பிரார்த்தனைகள்.