போலந்து விமான சாகச கண்காட்சி ஒத்திகையில் விபத்து; விமானி உயிரிழப்பு.!!!
போலந்தின் ராடோம் நகரில் நடைபெறவிருந்த விமான கண்காட்சியின் ஒத்திகையின் போது, போலந்து விமானப்படைக்கு சொந்தமான F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவத்தில் விமானி உயிரிழந்ததாக போலந்து இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ராடோம் விமான கண்காட்சிக்கு முந்தைய ஒத்திகை நடைபெற்றது. அப்போது, ஒரு விமானி F-16 விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். சாகச முயற்சியின் போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதன் விளைவாக, துரதிர்ஷ்டவசமாக விமானி உயிரிழந்தார்.
போலந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் வ்லாடிஸ்லாவ் கோசின்யாக்-காமிஸ் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து, “தாய்நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்த வீரர், துணிச்சலுடன் பணியாற்றிய அதிகாரி உயிரிழந்துவிட்டார்” என்று குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தின் காரணமாக, ராடோம் விமான கண்காட்சி இரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப கோளாறு, விமானியின் தவறு அல்லது பிற காரணங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் ஓடுபாதை சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தின்போது அங்கிருந்த பார்வையாளர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் போலந்து விமானப்படைக்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருக்கு போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உள்ளிட்ட உயரதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



