அவுஸ்ரேலியாவில் பண்டிகை கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு – 12 பேர் பலி.!!!
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பொண்டி கடற்கரை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், 12க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் வசித்து வரும் யூத சமூகத்தினர் தங்களுடைய மத பண்டிகையை ஒன்றுகூடி கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் குழப்பமும் பீதியும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அவுஸ்ரேலிய காவல்துறை, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்களை சுற்றிவளைத்தது. இதில் ஒருவரை காவல்துறை சுட்டுக்கொன்றதுடன், மற்றொருவரை உயிருடன் கைது செய்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது தனிநபர் செயலா என்ற கோணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற பொண்டி கடற்கரை பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவ்விடத்திற்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.



