சமூக உணர்வின் குரலாய் ‘தந்தனக்கிளி’ – கவிஞர் அலறியின் 8வது கவிதை நூல் வெளியீடு.!!!
பன்னூலாசிரியர், கவிஞர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி அலறி (ஏ.எல்.எம். றிபாஸ்) அவர்களால் எழுதப்பட்ட எட்டாவது நூலான “தந்தனக்கிளி” கவிதை நூலின் வெளியீட்டு விழா, புதுப்புனைவு வட்டத்தின் ஏற்பாட்டில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
நூலின் அறிமுக உரையை ஆசிரியை மற்றும் கவிஞர் றியாசா எம். சவாஹிர் நிகழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற நூலாய்வுப் பகுதிகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கவிஞர் கல்முனை ஜவாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளருமான எழுத்தாளர் மன்சூர் ஏ. காதிர், பேஜஸ் புத்தக நிலையத்தின் நிறுவுனரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இலக்கிய விமர்சகர் சிராஜ் மஸூர் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர், கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் உள்ளிட்ட பல சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் தொகுத்து வழங்கினார். அண்மையில் தேசிய விருதைப் பெற்றமைக்காக நூலாசிரியர் அலறி அவர்களுக்கு அதிதிகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கவிதை இலக்கியத்தில் புதிய அனுபவங்களையும் ஆழமான சமூகப் பார்வையையும் முன்வைக்கும் “தந்தனக்கிளி” கவிதைத் தொகுப்பு, இலக்கிய வாசகர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என விழாவில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.





















