துபாயில் ஏர்ஷோவில் துயர விபத்து: இந்திய தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது – விமானி உயிரிழப்பு.!!!
துபாய் உலக ஏர்ஷோ – 2025 கண்காட்சி இன்று (21) பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. பல நாடுகளின் முன்னேற்றமான போர் விமானங்கள் பங்கேற்கும் இந்த உலகப் புகழ்பெற்ற ஏர்ஷோவில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த தேஜஸ் போர் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருந்த வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த தேஜஸ் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. தரையில் விழுந்தவுடன் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக விமானம் பெரும் தீக்கோளமாக மாறி, நிகழ்ச்சி தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துயரமான விபத்தில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்து இடத்தைச் சுற்றி மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டன. விபத்து சூழ்நிலையைத் தொடர்ந்து, இன்றைய ஏர்ஷோ நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா – ஐ.அ.எ இணைந்து விபத்துக்கான காரணங்களை ஆராய உள்ளன.











