உம்ரா புனிதப்பயணத்தில் துயர விபத்து – 42 இந்தியர்கள் உயிரிழப்பு.!!!
சவுதி அரேபியாவில் உம்ராவுக்குச் சென்ற இந்திய பயணிகள் பயணித்த பேருந்து, டீசல் லாரியுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 42 இந்தியர்கள் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்திலிருந்து உம்ரா புனிதப்பயணத்திற்காக மக்காவுக்கு சென்ற பயணிகள் குழு, மக்காவில் புனித கடமைகளை முடித்துவிட்டு மதீனாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றது.
நள்ளிரவு நேரத்தில், பயணிகள் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோது, பேருந்தில் சென்ற பாதையில் டீசல் லாரி மோதியதில் உடனடியாக தீப்பற்றி பேரழிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்ட தகவல்படி, 20 பெண்கள் 11 குழந்தைகள் உட்பட மொத்தம் 42 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உம்ரா புனிதப்பயணத்தில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் இந்தியா மற்றும் உலக முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.