துருக்கி இராணுவ விமானம் விபத்து; 20 பேர் பலி.!!!
அஜர்பைஜான் எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்ஜியாவில் துருக்கி இராணுவத்திற்குச் சொந்தமான C-130 ரக சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அஜர்பைஜானில் உள்ள இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து புறப்பட்ட குறித்த இராணுவ விமானம் நேற்று (11) மாலை காகசஸ் மலைப்பகுதியில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் இராணுவக் குழுவினரும் பணியாளர்களும் சேர்த்து 20 துருக்கியர்கள் பயணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற நாட்டினைச் சேர்ந்த பயணிகள் இருந்தார்களா என்பதற்கான தகவல் இதுவரை வெளிவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
விமானம் ஆரம்பத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மலையில் மோதி நொறுங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது துருக்கி இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளுடன் இணைந்து விபத்து நடந்த இடத்தை அடைந்து மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
துருக்கி அதிகாரிகள் விபத்தின் காரணம் குறித்து விசாரணை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




