“சிவப்புக் கோட்டைத் தாண்டிட்டீங்கள்: பிச்சை எடுக்க வைப்போம்” – டிரம்ப், நெதன்யாகுவுக்கு – காலிபாஃப் கடும் எச்சரிக்கை.!!!
மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹம்மத் பாகர் காலிபாஃப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் உயர்தலைவர் அலி காமேனி மரணித்ததாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, நாடு முடங்கிவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், காலிபாஃப் நேரலை உரையாற்றினார்.
“முழு சக்தியை இப்போது காண்பீர்கள்”
“எங்கள் தலைவர் மரணித்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன. புதிய தலைமைச் சபை அமைக்கப்படும். பாதுகாப்புப் படைகள் இதுவரை தங்கள் முழு சக்தியின் ஒரு சிறு பகுதியையே பயன்படுத்தியுள்ளன,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்கள் சிவப்புக் கோட்டை தாண்டப்பட்டுள்ளது. இதற்கான விலை மிகப்பெரியது. இது சாதாரணப் போர் அல்ல; பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாடு,” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான், இஸ்ரேலின் மைய நகரமான டெல் அவிவ் மீது 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பை மீறியதாகக் கூறப்படுகிறது.
ஒரு 20 மாடிக் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்ததில், குறைந்தது ஒருவராவது உயிரிழந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவம், “வான் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி அளிக்காது” என தெரிவித்துள்ளது.
ஈரான் மீது பதிலடி
மறுபக்கம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து 1200-க்கும் மேற்பட்ட குண்டுகளை ஈரானுக்குள் வீசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மினாப் நகரில் ஒரு ஆரம்பப் பள்ளி தாக்கப்பட்டதில் 148 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஈரானில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பினரின் கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்கள், மத்திய கிழக்கில் பெரும் போர் அபாயத்தை உருவாக்கியுள்ளன. சர்வதேச சமூகம் நிலைமையை கவனத்துடன் நோக்கி வருகிறது.
பதற்றம் மேலும் அதிகரிக்காமல் இருக்க தூதரக முயற்சிகள் அவசியம் என அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.