பத்து வயது சிறுமி கவிதை நூல் வெளியிட்டு சாதனை – காத்தான்குடியில் சம்பவம்.!!!
(ஜே.கே)
ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பத்து வயது சிறுயொருவர் தான் எழுதிய கவிதைகளை நூலாக வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.
காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலய மாணவி மரின் தமீம் என்ற ஆரம்ப வகுப்பு மாணவியே தான் எழுதிய 43 கவிதைகளைத் தொகுத்து “தொட்டில் பூக்கள்” எனும் பெயரில் கவிதை நூல் வெளியிட்டுள்ளார்.73 பக்கங்களில் குறித்த நூல் வெளிவந்துள்ளது.
அந்நூலை காத்தான்குடி கலை இலக்கிய கழகம் வெளியிட்டுள்ளது. குறித்த கவிதை நூலின் வெளியீட்டு விழா காத்தான்குடி அஷ்ஷுஹதா பாடசாலையின் அதிபர் எம்.சி.எம்.முனீர் தலைமையில் (14) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்க்கான், கலைமாமணி செரண்டிப் முஸ்தபா, மதகு ஊடக வலைமைப்பின் பணிப்பாளர்களான திரு முரளிதரன், திருமதி ஜானு முரளிதரன், தென்னிந்திய சின்னத்திரை நடிகர் ஆர்.ஜே. டிலு, ஆசிரிய ஆலோசகர் ஜவாத் உட்பட பெரும் எண்ணிக்கையிலான இலக்கியவாதிகள், ஊடகவீயலாளர்கள், கல்விமான்கள் கலந்துகொண்டனர்.
அஷ்ஷுஹதா வித்தியாலய மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நூலாசிரியர் மாணவி மரின் தமீம் அவர்களை காத்தான்குடி கலை இலக்கியக் கழகம், காத்தான்குடி டெலன்ட் கலைக்கழகம், காத்தான்குடி வெள்ளி வெளிச்சம் ஊடகம், கவிஞர் கலைமதி எம்.ஏ.சீ.றபாய்தீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி,விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
நூல் நயவுரையை சிரேஷ்ட ஊடகவியலாளரும், சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்க்கான் அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கவிஞர் எம்.ஐ.எம்.முஸ்தபா வரவேற்புரையை நிகழ்த்த ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.முஹம்மத் நன்றியுரை நிகழ்த்தியதுடன் நூலாசிரியை மரின் தமீம் ஏற்புரை நிகழ்த்தினார்.











