காத்தான்குடியில் இடம்பெற்ற; சர்வதேச எழுத்தறிவு தின “உலகை அறிவோம்” கருத்தாடல் களம் நிகழ்வு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு, சுற்றாடல் பிரிவு என்பன இணைந்து நடாத்திய “உலகை அறிவோம்” கருத்தாடல் களம் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு, இன்று (08) காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் சி. ஜெயசங்கர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஆர். வாமதேவன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் ஏ.எம். சுல்மி, எஸ்.எச்.எம். முஸம்மில், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உஷா, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் எம். அன்சார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி பிரதேச கல்வி கோட்டத்தில் உள்ள எட்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நடாத்தப்பட்ட பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இம்மூன்று நாள் பயிற்சிப் பட்டறையின் வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் சி. ஜெயசங்கர் நடாத்தியதோடு, இறுதி நாள் நிகழ்வில் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டவை குறிப்பிடத்தக்கது.










