சிறுநீரகக் கல் நோயாளர்களுக்கு நவீன சிகிச்சை; மீரிகமவில் தேசிய மையம் திறப்பு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
இலங்கையில் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கு தரமான மற்றும் விரைவான சிகிச்சையை வழங்கும் நோக்கில், அனைத்து நவீன வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ள மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின் மூலம், நாடு முழுவதும் சிறுநீரகக் கல் நோயாளர்களுக்கு உலகத் தரத்திலான சிகிச்சை வசதிகள் கிடைக்கவுள்ளன.
இலங்கையில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நவீன எண்டோயூராலஜி தொழில்நுட்பங்களின் பற்றாக்குறையால், 5,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சத்திரசிகிச்சைக்காக காத்திருக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக மூன்று மாடிகளைக் கொண்ட அதிநவீன சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் 564 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் கட்டிட நிர்மாணப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், நவீன மருத்துவ உபகரணங்கள் தொழிலதிபரும் பொறியியலாளருமான நஹீல் விஜேசூரியவின் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இம்மையத்தின் சிறப்பம்சமாக, அரச சுகாதார சேவையில் பணியாற்றும் எந்தவொரு விசேட சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணரும் தமது நோயாளர்களை இங்கு அழைத்து வந்து, உலகத் தரத்திலான உபகரணங்களைப் பயன்படுத்தி நேரடியாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மீரிகம மருத்துவமனையின் பணிப்பாளர் சமிந்த பிரேமரத்ன உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த தேசிய சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், நாட்டில் சிறுநீரகக் கல் நோயாளர்களுக்கான காத்திருப்பு காலம் குறைவதுடன், தரமான மற்றும் விரைவான சிகிச்சை சேவைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
