ஆரம்ப சுகாதார சேவைக்கு முன்னுரிமை; 2027 வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு கூடுதல் கவனம் – ஜனாதிபதி.!!!
நாட்டின் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கும், சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் தேவையான நிதியை ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான முன்கூட்டிய கலந்துரையாடல், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) நடைபெற்றபோது அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் “ஆரோக்கிய நல்வாழ்வு சேவை மையங்கள்” அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறும், விஞ்ஞான அடிப்படையிலான புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், அரச வைத்தியசாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தி, டிஜிட்டல் சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தரமான சிகிச்சையை மக்கள் எளிதில் பெற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சுகாதாரத் துறையின் 26 பாரிய கட்டுமானத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது மொத்தம் 48 நிர்மாணத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நவீன கொள்வனவு முறைமைகளை அறிமுகப்படுத்துதல், மருந்துத் தரப் பரிசோதனை வசதிகளை விரிவுபடுத்துதல், Patient Health App, Tele-Medicine, National Electronic Health Record உள்ளிட்ட டிஜிட்டல் திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.
அத்துடன், சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையை சர்வதேச தரத்திற்கேற்ப மேம்படுத்துதல், புதிய மருத்துவப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல், மருத்துவமனைகளின் மனிதவளத் தேவைகளை மறுஆய்வு செய்தல் ஆகிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி, வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.



