குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; 2027 வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம்.!!!
▪︎ யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் விரைவுபடுத்தப்படும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.
கொழும்பு, ஜூலை 08 – நாட்டின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வரலாற்றிலேயே அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மீள்குடியேற்றப் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களின் 2026ஆம் ஆண்டு திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஒரே துறையைச் சார்ந்த பல நிறுவனங்கள் வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் செயல்படுவதால் நிர்வாக செயல்திறன் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், பயன்பாடின்றி நீடித்து வரும் நிறுவனங்களை மறுசீரமைத்து அல்லது நீக்குவதன் மூலம் அரசின் தேவையற்ற நிதிச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கண்டி–வடக்கு ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம், கொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம், அம்பத்தலே நீர் வழங்கல் திட்டம் மற்றும் அநுராதபுரம்–வடக்கு நீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட முக்கிய தேசிய திட்டங்களின் முன்னேற்றமும் எதிர்கால நடவடிக்கைகளும் இதன்போது ஆராயப்பட்டன.
அதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளை நிறைவு செய்ய வீட்டுவசதி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மேலும், அரசின் “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




