கடற்படையின் அதிரடி; 1.43 இலட்சம் மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பறிமுதல்.!!!
-கற்பிற்டி எம்.எச்.எம்.சியாஜ்-
புத்தளம் மாவட்டத்தின் சின்னப்பாடு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவிலான நுகர்வுப் பொருட்களை இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கைப்பற்றியுள்ளன.
வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி மற்றும் கடலோர பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து கடந்த ஜூலை 08 ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, கடற்கரைப் பகுதியில் எடுத்துச் செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த 15 சந்தேகத்திற்கிடமான பொதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது, சுமார் 143,600 மருந்து மாத்திரைகள், 22,064 ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் 3,816 நுளம்பு விரட்டி பூச்சுத் திரவக் குழாய்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டு அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்தும் விசேட கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.



