பாலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டம் தனிமையில் இல்லை; உலகின் பல கோடி மக்கள் அவர்களுடன் நிற்கிறார்கள்.!!!
பாலஸ்தீனத்துடன் நாமும்”
என்ற தொனிப்பொருளில் பல்லாயிரக்கணக்கானவர்களின் பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் (15) வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற மனித நேயத்திற்கான ஒற்றுமைப் பேரணியில் காத்தான்குடி மண்ணில் இருந்து, சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு (OSPR) யின் பிரதிநிதிகளாக நாமும் பங்குபற்றி இருந்தோம்.
பாலஸ்தீனத்தின் விடுதலைக்காகவும், பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேலிய வந்தேறு குடியேறிகள் தொடுத்துவருகின்ற இனப்படுகொலையைக் கண்டித்தும், எமது கண்டனத்தைக் குறித்த மனித நேயத்திற்கான ஒற்றுமைப் பேரணியில் நாம் பதிவு செய்திருந்தோம்.
மற்றும் பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின் மனிதாபிமானமற்ற தாக்குதல்களினால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவதுடன் இரண்டு மில்லியன் மக்கள் உணவு, மருந்து இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சர்வதேச நாடுகள் தலையிட்டு பாலஸ்தீன மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் உயிர் உடைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான உணவு உட்பட அத்தியாவசிய உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையினையும் நாம் பதிவு செய்திருந்தோம்.
அதே போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து கொண்டிருக்கின்ற இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் ஓய்வெடுப்பதற்கு இலங்கையில் எதற்காக இடம் கொடுக்க வேண்டும் என்ற வினாவை அரசாங்கத்திடம் நாம் தொடுத்திருக்கிறோம்?
இஸ்ரேல் எனப்படும் காலனித்துவ அரசாங்கத்தின் பிரஜைகளான இஸ்ரேலியர்களுக்கு இலவச விசாவை எவ்வாறு வழங்குவீர்கள் என்ற கேள்வியையும் நாம் எமது ஆட்சியாளர்களிடம் கேட்க விரும்புகிறோம்?
பாலஸ்தீனத்தின் விடுதலைக்காகக் கடத்த அரசாங்கங்கள் பின்பற்றி வந்த கொள்கையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்றும்,
இலங்கைக்கும் பலஸ்தீனுக்குமிடையிலான நல்லுறவிழும் பாலஸ்தீன மக்களது போராட்டத்திலும் எமது அரசு துணை நிற்க்க வேண்டும் என்றும்,
இஸ்ரேலியர்களை எமது நாட்டிற்குள் அனுமதிப்பதனை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதும் எமது கோரிக்கைகளாகும்?
பாலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டம் தனிமையில் இல்லை, உலகின் பல கோடி மக்கள் அவர்களுடன் நிற்கிறார்கள் என்பதை, இலங்கையில் நடைபெற்ற குறித்த போராட்டமும் உலகிற்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லி இருக்கிறது..
-ஹம்ஸா கலீல், காத்தான்குடி-










