சட்டவிரோத சொத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை; கோடிக்கணக்கான சொத்துக்கள், வாகனங்கள் 14 நாட்களுக்கு முடக்கம்.!!!
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் தொடரும் நிலையில், முடக்கப்பட்ட சொத்துக்களை 14 நாட்களுக்கு விற்பனை செய்யவோ, உரிமையை மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பகுதியில் ரூ.9 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்
வத்தளையைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி பல சொத்துக்களையும் வாகனமொன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ரூ.9 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடையதாக மதிப்பிடப்பட்டுள்ள பின்வரும் சொத்துக்கள் செப்டெம்பர் 17, 2026 முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன:
ஹுனுப்பிட்டிய பகுதியில் 7 பேர்ச்சஸ் காணி மற்றும் இரண்டு மாடி வீடு – ரூ.4 கோடி
ஹுனுப்பிட்டிய, சட்டல பகுதியில் 17 பேர்ச்சஸ் காணி மற்றும் இரண்டு வீடுகள் – ரூ.3 கோடி
ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியில் 5 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டடம் – ரூ.50 இலட்சம்
ஹுனுப்பிட்டிய, காந்தி மாவத்தையில் 3 பேர்ச்சஸ் காணி மற்றும் கட்டடம் – ரூ.70 இலட்சம்
விசேட வகை கார் – ரூ.80 இலட்சம்
ரூ.3.5 கோடி பெறுமதியான ஜீப்பும் முடக்கம்
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசாரணையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி ரூ.3.5 கோடி பெறுமதியான டொயோட்டா ரக ஜீப் வாகனமொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த ஜீப் வாகனம் 2026 செப்டெம்பர் 16ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட காலப்பகுதியில் குறித்த வாகனத்தை விற்பனை செய்யவோ, உரிமையை மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.