மட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை; தீயணைப்பு கருவிகள் இல்லையெனில் உரிமம் புதுப்பிக்கப்படாது – மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன்.!!!
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் தீ விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கார்பன் டைஆக்சைடு (CO₂) அடிப்படையிலான தீயணைப்பு கருவிகளை கட்டாயமாக பொருத்த வேண்டும் என மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், நேற்று (07) நகரப் பகுதியில் இரண்டு வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் மின் ஒழுக்குக் கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறினார்.
அண்மைய காலமாக மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடைத்தொகுதிகள், தங்குமிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ச்சியாக தீ விபத்துகள் பதிவாகி வருவதாகவும், இதனால் உயிர் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்க்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவசரகாலங்களில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைவாகச் செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தி பெரும் அனர்த்தங்களைத் தடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தீ விபத்து ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி தீ பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றார்.
அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீயணைப்பு கருவிகள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவை பின்பற்றாத வர்த்தகர்களுக்கு எதிர்காலத்தில் வியாபார உரிமம் புதுப்பித்து வழங்கப்படமாட்டாது என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பமான காலநிலை காரணமாக தீ வேகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதால், வர்த்தகர்கள் மின் இணைப்புகள் மற்றும் தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தகர்களும் உடனடியாக மாநகர சபையுடன் தொடர்புகொண்டு தங்களது வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவிகளை பொருத்தி, தேவையான தீ பாதுகாப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறும் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் வலியுறுத்தினார்.