நீர்கொழும்பு சிறை கலவர எதிரொலி; மட்டக்களப்புக்கும் பொலன்னறுவைக்கும் கைதிகள் மாற்றம்.!!!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை பாதுகாப்பு கருதி நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று (07) மாலை சுமார் 6.00 மணியளவில், 60 கைதிகள் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் (எஸ்.ரி.எவ்.) பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதிகள் வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 400 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் கொள்ளளவு கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையில், ஏற்கனவே 960 கைதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நீர்கொழும்பிலிருந்து மேலும் 60 கைதிகள் மாற்றப்பட்டதன் மூலம், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள கைதிகளின் மொத்த எண்ணிக்கை 1,020 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, அதே அவசர இடமாற்றத் திட்டத்தின் கீழ், மேலும் 63 கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்புடன் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அவசர இடமாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.