இரு சிறுவர்களை கொடூரமாக தாக்கி காணொளி பதிவு; 26 வயது தந்தை கைது.!!!
பலாங்கொடை – பின்னவலை பகுதியில் தனது பராமரிப்பிலிருந்த 7 வயது ஆண் குழந்தையையும், 4 வயது பெண் குழந்தையையும் கொடூரமாக தாக்கி, அதனை காணொளியாக பதிவு செய்து வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவிக்கு அனுப்பியதாக கூறப்படும் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பின்னவலை பொலிஸார் விரைந்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நி. சஜித்குமார் என்ற 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் தொழில்புரிந்து வரும் குழந்தைகளின் தாய், தனது இரு பிள்ளைகளையும் கணவரின் பராமரிப்பில் விட்டுச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மனைவி தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காததால் ஏற்பட்ட கோபத்தில், குறித்த நபர் குழந்தைகளை தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 4 வயது பெண் குழந்தையும் 7 வயது ஆண் குழந்தையும் வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் பின்னணியை கண்டறிவதுடன், சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பின்னவலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுத்து 24 மணித்தியாலங்களுக்குள் சந்தேகநபரை கைது செய்த பின்னவலை பொலிஸாருக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
