வெளிநாட்டு கடவுச்சீட்டு வழக்கு: சஷி வீரவன்சவுக்கு முன்பிணை.!!!
• வழக்கு செப்டெம்பர் 27 ஆம் திகதி
மீண்டும் விசாரணைக்கு.
முறையற்ற வகையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பான குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சஷி வீரவன்சவை முன்பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது சஷி வீரவன்சவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சஷி வீரவன்ச சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
குறித்த மேன்முறையீடு தொடர்பாக அடுத்த மாதம் உயர் நீதிமன்றத்தில் விடயம் உறுதிப்படுத்தப்படவுள்ள நிலையில், அதுவரை அவரை முன்பிணையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டப்படி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய அவருக்கு உள்ள உரிமையின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு உட்பட்டு சஷி வீரசேகரவை முன்பிணையில் விடுதலை செய்ய பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
