சிறுவர் மற்றும் பெண்கள் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கம்; அபராதம் 10 மடங்கு உயர்வு.!!!
பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.10,000 இலிருந்து ரூ.1 இலட்சமாக அதிகரிக்கும் சட்டத் திருத்தம் இன்று (20) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றது.
விவாதத்தைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்கும் வகையில் இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களினால் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய திருத்தத்தின் மூலம், பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பான சட்டவிரோத செயல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரை அதிகரிக்கப்படுகிறது.