கடற்படை–விமானப்படை தளபதிகள் சந்திப்பு; தேசிய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை திங்கட்கிழமை (06) விமானப்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.
இராணுவ மரபுகளுக்கு அமைவாக விமானப்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த கடற்படைத் தளபதிக்கு, விமானப்படையினரால் சம்பிரதாயபூர்வ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பில், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய மூலோபாய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை வழங்கி வரும் பங்களிப்புகள் குறித்தும், முப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சந்திப்பின் நிறைவில், இரு தளபதிகளும் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டு, முப்படைகளுக்கிடையேயான நல்லுறவு மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.







