மட்டக்களப்பு சிறைச்சாலையில் பரபரப்பு; விளக்கமறியல் கைதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி.!!!
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (07) செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த குறித்த இளைஞர், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறைச்சாலைக்குள் அவர் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.