பெரகல – வெல்லவாய பிரதான வீதி இருவழிப் பாதையாக நவீனமயமாக்கம்; 3ஆம் கட்டப் பணிகள் ஆரம்பம்.!!!
இலங்கையின் முக்கிய பிரதான வீதிகளில் ஒன்றான ஏ–4 (A4) பெரகல – வெல்லவாய பிரதான வீதியை இருவழிப் பாதையாக நவீனமயமாக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் நேற்று (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ், “மறுமலர்ச்சிக்கான பாதை” (පුනරුදයට මඟ) திட்டத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்பட்ட பெரகல – வெல்லவாய வீதியால், பிரதேச மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இத்திட்டம் நிறைவு பெறுவதன் மூலம் அவற்றிற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மொத்தமாக ரூ.2,380 மில்லியன் (ரூ.238 கோடி) நிதியை ஒதுக்கியுள்ளது.
இதில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட 3ஆம் கட்டப் பணிகளுக்காக மட்டும் ரூ.322 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத் திட்டமும் ஐந்து கட்டங்களாக ஓராண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அனைத்து கட்டுமானப் பணிகளும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA)-யின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டம் நிறைவடைந்ததும், தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கும் குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









