சாய்ந்தமருது நகரசபை சட்டரீதியானது: இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.!!!
சாய்ந்தமருது நகரசபை சட்டரீதியான அமைப்பாகும் என்றும், அதற்கான தேர்தலை தாமதப்படுத்துவது அடிப்படை உரிமை மீறலாகும் என்றும் உயர்நீதிமன்றம் இன்று (07) முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சாய்ந்தமருது நகர சபைக்கும் கல்முனை மாநகர சபைக்கும் இடையிலான எல்லை நிர்ணயம் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இதுவரை தேர்தல் நடத்தப்படாதமை அடிப்படை உரிமை மீறலாகும் எனக் குறிப்பிட்டு, சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். சலீம் மற்றும் ஏ.ஆர்.எம். அசீம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், சாய்ந்தமருது மக்களிடையே பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
அதேசமயம், எல்லை நிர்ணய நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு, ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

