இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு; இரு இளைஞர்கள் காயம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி சந்திக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 59 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரு இளைஞர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து சனிக்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின் ஆரம்பகட்ட தகவல்களின்படி, கற்பிட்டியைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் குறிஞ்சிப்பிட்டி உள்வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் நுழைந்துள்ளார். அதேவேளை, கற்பிட்டியிலிருந்து குறிஞ்சிப்பிட்டி நோக்கி 21 வயதுடைய இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்ததாகவும், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன. இரு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் பலத்த காயமடைந்ததுடன், பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த மூவரும் முதலில் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எனினும், 59 வயதுடைய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.