மட்டக்களப்பு புதுப்பாலம் திடீரென இடிந்து தாழிறங்கியது; பெரும் அனர்த்தம் தவிர்ப்பு.!!!
மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் முக்கிய பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை திடீரென இடிந்து வீழ்ந்தது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் உயிரிழப்பு அல்லது காயம் உள்ளிட்ட எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள இப்பாலத்தின் மேற்பரப்பு வீதி கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்டிருந்த நிலையில், பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இப்பாலம் மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான இணைப்புப் பாதைகளில் ஒன்றாக விளங்குவதுடன், பாடசாலை மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி அதிகளவில் பயன்படுத்தும் முக்கிய பாதையாகும். மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளிகளை ஏற்றிச் செல்லும் அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களும் இவ்வீதியை அதிகம் பயன்படுத்தி வருகின்றன.
இதனால், பாலம் இடிந்து வீழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் பலரும் இடத்துக்குச் சென்று பாலத்தின் நிலையை பார்வையிட்டு வருகின்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் மாநகர சபை ஆணையாளர் சம்பவ இடத்துக்குச் சென்று சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிலைமைகளை ஆய்வு செய்தனர்.
பாலத்தின் இடிவுக்கான காரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பொதுமக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






