கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக மீண்டும் வர இடமளிக்க மாட்டோம் – பேராயர் மெல்கம் ரஞ்சித்.!!!
கடந்த காலங்களில் மனித உயிர்களைப் பலிகொண்டதுடன், தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக் கொண்ட கொலையாளிகளும், ஊழல்வாதிகளும் மீண்டும் சமூகத்தின் முன்னால் உத்தமர்களைப் போல் தோன்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை எவ்வகையிலும் மூடிமறைக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது, இத்தாக்குதலின் உண்மைகளை மறைக்க மாட்டேன் என உறுதியளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, தற்போதைய விசாரணைகள் வேகமடைந்துள்ளமை வரவேற்கத்தக்க முன்னேற்றம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பின்னால் பாரிய அரசியல் சதித்திட்டம் இருந்தமைக்கான உறுதியான சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, இந்தத் தாக்குதல் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்தவர்கள் நீதிக்காகவும், தார்மீகப் பொறுப்புணர்வுடனும் துணிச்சலாக முன்வந்து சாட்சியமளிக்க வேண்டும் என ஒட்டுமொத்த சமூகத்தினரிடமும் பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.