அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 வீரர்கள் பலி, துணை விமானி தீவிர சிகிச்சையில்.!!!
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான AN-32 ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமின் ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் விமானத்தில் பயணித்த 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், உயிர் பிழைத்துள்ள துணை விமானி ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சோவியத் யூனியனால் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட AN-32 ரக விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 100 AN-32 விமானங்கள் இந்திய விமானப்படையின் சேவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான காலநிலை மற்றும் உயரமான விமான நிலையங்களில் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள AN-32 விமானம், 7.5 டன் சரக்குகள், 50 பயணிகள் அல்லது 42 வான்குடை வீரர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். மேலும், தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காகவும் இவ்விமானங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து இந்திய விமானப்படை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.




