மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயார்; நாடாளுமன்ற சட்டத்திற்காக காத்திருப்பு.!!!
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றித் தரப்பட்டால், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முழுமையாகத் தயாராக இருப்பதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தேர்தல்களைப் பிற்போடுவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வித தேவையும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், தேர்தலுக்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிற்போடப்பட்ட தேர்தல்களை தற்போதைய அரசாங்கமே நடத்தி முடித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
“எமது அரசாங்கத்தின் கீழ் இதுவரை இரண்டு தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. எனவே தேர்தல்களை நடத்துவதில் எவ்வித தயக்கமும் இல்லை. மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதனை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்து வரும் நிலையில், தேர்தல் முறைமைக்கான சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.