எரிபொருள் மானியம் ஜூனுடன் நிறைவு? விலை அதிகரிப்பு குறித்து இன்னும் முடிவில்லை.!!!
அரசாங்கம் எரிபொருளுக்காக வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க நிதி தொடர்பான குழு (COPF) முன்னிலையில் நேற்று ஆஜரான அதிகாரிகள், பொது நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருப்பதாகவும், அதற்கமையவே எரிபொருள் விலை தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே 13 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
மேலும், ஒரு லீட்டர் டீசலுக்காக அரசாங்கம் சுமார் 100 ரூபாய் மானியம் வழங்கி வருவதால், 392 ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்படும் டீசலின் மூலம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ச்சியான நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த நிலைமையை நீண்ட காலத்திற்கு தொடர முடியாது என்றும் ஜனாதிபதி அப்போது வலியுறுத்தியிருந்தார்.
இதனால், ஜூன் மாதத்திற்குப் பின்னர் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் நிலவுகிறது.