டீசல் உண்மையான விலை 720 ரூபா – அரசாங்கம் சலுகையுடன் 392 ரூபாவுக்கு வழங்குகிறது: ஜனாதிபதி.!!!
நுவரெலியா, மே 13 – உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், நாட்டில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை சுமார் 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருப்பதாகவும், அதற்கமைய சில கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு சுமார் 100 ரூபாய் சலுகை வழங்கி, பொதுமக்களுக்கு 392 ரூபாய் என்ற விலையில் வழங்கி வருவதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாகவும் கூறினார்.
எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையும் வேகமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பெப்ரவரி மாதத்தில் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் அது 216 மில்லியன் டொலர்களாகவும், ஏப்ரல் மாதத்தில் 368 மில்லியன் டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் இது 522 மில்லியன் டொலர்களாக உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் எரிபொருள் இறக்குமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பது சவாலாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மேலும், கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்பட்ட சுமார் 84 பில்லியன் ரூபாய் நட்டத்தை அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எரிபொருள் விலை உயர்வு காரணமாக மின்சார கட்டணத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு தீர்வுகளை விரைவில் அறிவிக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.